கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில், போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் மையை கொண்டு கையில் அச்சு வைத்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கைஅச்சை பதிந்து முதல் உறுதிமொழியை பதிவு செய்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், “போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்களின் முக்கிய இலக்கு. போதைப் பொருட்களுக்கு எதிராக சுதந்திரமாகவும் தீவிரமாகவும் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்த உள்ளோம்” என்றார்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும் சூழல் உருவாகியுள்ளதால், அந்த சங்கிலியை முழுமையாக உடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தமிழ்நாட்டிற்குள் எந்த வழியிலும் போதைப் பொருட்கள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.
டாஸ்மாக் நிர்வாகம் குறித்து பேசிய அவர், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதைப் போல நாங்கள் செயல்பட மாட்டோம். டாஸ்மாக் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களையும் புரட்சிகரமான மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளோம். தனிநபர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.1,000 கோடி அளவிலான முறைகேடுகளை தடுத்து நிறுத்தியுள்ளோம். இதற்கான அரசாணை ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.
டாஸ்மாக் துறையில் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், “மாதந்தோறும் ரூ.100 கோடி வரை தனிநபர் கணக்குகளுக்கு சென்றதாக தகவல்கள் உள்ளன. இந்த நிலை இனி தொடராது. எந்த துறையிலும் ஊழல் அனுமதிக்கப்படாது. ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.
மேலும், டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூலிக்கும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து கடைகளிலும் விலைப்பட்டியலுக்கு மேல் பணம் வசூலிக்க முடியாத சூழல் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
“அதிகாரிகளிடம் பணம் வசூல் செய்யும் முறை நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. அதனை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஊழியர்கள் நேர்மையாக பணியாற்ற அனுமதிக்கப்படாத சூழலை மாற்றியமைக்க முயற்சி செய்கிறோம்” என்றும் கூறினார்.
மேலும், இதுவரை 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை என்றும் அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்தார்.
“துறையில் நடைபெற்ற அனைத்து தவறுகளையும் ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருவோம். ஆண்டுக்கு சுமார் ரூ.3,600 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டுகளில் பணிநீக்கம் செய்யப்பட்ட 600 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இறுதியாக, “டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக ரூ.10 கூட வாங்க வேண்டாம். வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வெளியாகும் வீடியோக்கள் மற்றும் புகார்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.